திருப்பூர் : பின்னல் புக் டிரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில், திருப்பூர் கே.ஆர்.சி., சிட்டி சென்டரில் புத்தக திருவிழா, வரும் 25ல் துவங்கி, பிப்., 3 வரை நடக்கிறது; தினமும் மாலை கருத்தரங்கு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 37 பதிப்பகங்கள்; 36 விற்பனையாளர்கள்; 11 மல்டி மீடியா நிறுவனங்கள் பங்கேற்று, 120 ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன.
வரவேற்பு குழு தலைவர் சவுக்கத்தலி, செயலாளர் முத்துக்கண்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவ து:
திருப்பூரில், 10 வது புத்தக திருவிழா நடைபெற உள்ளது. வன்முறை, போதை என சீரழிந்துள்ள சமுதாயத்தை மாற்றவும், மனித மாண்புகளை மீட்கவும், கருத்தியல், சுரண்டலுக்கு எதிராக சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாசிப்பு அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், புத்தக திருவிழா நடத்தப்படுகிறது.
திருப்பூரில் கிடைக்கும் வரவேற்பை பார்த்து, கடந்தாண்டை விட, 25 பதிப்பாளர்கள் ஆர்வமாக முன்வந்து, பங்கேற்கின்றனர். தினமும் மாலை கருத்தரங்கு, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி மற்றும் குறும்படங்கள் வெளியிடப்படும்.
நிகழ்ச்சிகளில், தமிழக அரசின் முதன்மை செயலர் இறையன்பு, அரசு செயலர் தனவேல், ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதயச்சந்திரன், போலீஸ் டி.ஐ.ஜி., பாரி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, கருத்துரை வழங்குகின்றனர். புத்தக திருவிழாவை, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் ஆனந்தனர் திறந்து வைக்கவும், முதல் விற்பனையை மேயர் விசாலாட்சி துவக்கி வைக்கவும் உள்ளனர், என்றனர்.