திருப்பூர்:காற்றாலை மின்சாரம் கை கொடுப்பதால், மின்வெட்டு நேரம் வெகுவாக குறைந்துள்ளது. அதேநேரத்தில், மின்னழுத்தம் குறைவு காரணமாக, கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, மின் உபகரணங்கள் பழுதாவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில், பனியன் நிறுவனங்கள், ஆயில், அரிசி, இயந்திர உற்பத்தி தொழிற்சாலைகள், வணிகம் மற்றும் வீட்டு மின் இணைப்புகள் என ஐந்து லட்சம் இணைப்புகள் வரை உள்ளன. தினமும் சராசரியாக 500 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. மின் பற்றாக்குறை காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக, தொழில் துறையினர் மட்டுமின்றி, பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.கடந்த இரு வாரங்களாக, காற்றாலை மின்னுற்பத்தி கிடைப்பதால், மின்வெட்டு நேரம் வெகுவாக குறைந்துள்ளது. சில நாட்கள் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைத்தது. தொழில் துறையினரும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்திருந்த நேரத்தில், கடந்த சில நாட்களாக தாழ்வழுத்த மின் வினியோகம் காரணமாக, கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இயந்திரங்களை இயக்கமுடியாமல், ஜெனரேட்டர்களையே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில் துறையினரும், வீடுகளில், மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனங்களுக்கு போதிய மின்சாரம் கிடைக்காமல் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெண்களும் தெரிவித்தனர். "பீக் அவர்ஸ்' எனப்படும், மாலை 6.00 முதல் 9.00 மணி வரை, மிகவும் குறைந்தழுத்த மின்சாரம் மட்டுமே சப்ளையாகிறது; அதனால், மின் உபகரணங்கள் பழுதாகி வருகின்றன.