திருப்பூர்:"காற்றாலை மின்னுற்பத்தி அதிகரித்துள்ளதால், உயரழுத்த மின்சார பயன்பாட்டுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்,' என, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இச்சங்க தலைவர் நாகராஜன், தமிழக மின்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம்:சில நாட்களாக, காற்றாலை மின்னுற்பத்தி கணிசமான அளவு உயர்ந்து, தொழில் துறையினருக்கு உதவி வருகிறது. வரும் ஆறு மாதங்களுக்கு மின்னுற்பத்தி அதிகரித்து, உயரழுத்த மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு சீரான மின் வினியோகம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.தற்போதைய நிலவரப்படி, 24 மணி நேரத்தில் 3,000 முதல் 3,500 மெகாவாட் வரை மின்னுற்பத்தி நடக்கிறது. எனினும், உயர் மின்னழுத்த இணைப்பில் தேவையான அளவுக்கு மின்சாரம் பயன்படுத்த முடிவதில்லை.மொத்த தேவையில், 60 சதவீதத்தை மட்டுமே பெற வேண்டும்; மொத்த மின்திறனில் 60 சதவீதத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும்; மாலை 6.00 முதல் இரவு 10.00 மணி வரை, உயரழுத்த மின்பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இக்கட்டுப்பாடுகளால், உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாக பெற முடியவில்லை. காற்றாலை மின்னுற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டும் என மின்வாரியம் நெருக்கடி தருகிறது. இதனால், முழு நேர மின்வினியோகம் இருந்தாலும், தடை செய்யப்பட்ட நேரத்தில், ஜெனரேட்டர் மூலம் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.மின்சாரம் இருக்கும் நேரங்களில், உயரழுத்த மின்சாரத்தை தேவையான அளவுக்கு பயன்படுத்தவும், உற்பத்தி குறையும்போது, 20 சதவீதம் பயன்பாட்டை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உற்பத்தி சீரான தருணங்களில், மாலை நேர மின்கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும், என, அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment