31-க்குள் மின் விநியோகம் சீராகாவிட்டால் வேலைநிறுத்தம்
By அவிநாசி,
First Published : 22 December 2012 04:43 AM IST
வரும் 31-ஆம் தேதிக்குள் சீரான மின்சாரம் வழங்காவிட்டால் வேலைநிறுத்தம் செய்வதென விசைத்தறி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டுக் கமிட்டிக் கூட்டம், தெக்கலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
தெக்கலூர் பகுதி தலைவர் எஸ்.சுப்பு தலைமை வகித்தார்.
இதில், தமிழக அரசு மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் கடந்த ஏப்ரலில் விசைத்தறித் தொழிலுக்கு கடுமையான கட்டண உயர்வை அமல்படுத்தியது. இதனால், விசைத்தறியாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். சிறு, குறு விசைத்தறியாளர்களின் நலன் கருதி சென்னைக்கு நிகராக, மாநிலம் முழுவதும் சீரான மின்சாரம் வழங்க வேண்டும். தொடர் மின்வெட்டால் விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
டீசல் வாங்கித் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. டிச.31-க்குள் சீரான மின்சாரம் வழங்காவிட்டால் வேலைநிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. விசைத்தறியாளர்களுக்கு டீசலை மானிய விலையில் மத்திய அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மங்களம், சோமனூர், பெருமாநல்லூர், 63 வேலம்பாளையம், பல்லடம், தெக்கலூர், சூரிபாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment