திருப்பூர்:நேற்று முன்தினம் இரவு, மின்சாரம் தாக்கி, ஒருவர் பலியானார்; நஷ்ட ஈடு வழங்கக்கோரி, உறவினர்கள், தொழிலாளர்கள், வடக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பாண்டியராஜன் மகன் கண்ணன், 28. ஐந்து ஆண்டுகளாக, குமார் நகர் மின்வாரிய அலுவலகத்தில், கணக்கில் வராத, தற்காலிக பணியாளராக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 11.00 மணிக்கு, லட்சுமி நகர் பகுதியில் மின்தடைஏற்பட்டுள்ளதாகவும், சரி செய்து வருமாறும், "போர்மேன்' கூறியுள்ளார்.பியூஸ் போட கண்ணன், மின்கம்பத்தில் ஏறியபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே பலியானார். வடக்கு போலீசார்,சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.நேற்று காலை 7.00 மணிக்கு, கண்ணனின் உறவினர்கள் மற்றும் திருப்பூர் மின் கோட்டத்தில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றிவருபவர்கள், "மின் பகிர்மான கழக அதிகாரிகள், எங்களிடம் பணியாற்ற சொன்னாலும், விபத்து ஏற்பட்டால், யார் என்றே தெரியாது; மின் பகிர்மான கழக பணியாளர்களை தவிர யாரும் பணி செய்யக்கூடாது என அறிவித்து விடுகின்றனர்.கண்ணன் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வடக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்களிடம், போலீசார் பேச்சு நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment