போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Tuesday 26 February 2013

400 கிலோவாட் உயர் அழுத்த மின் கம்பிகளில் இருந்து கசியும் மின்சாரம் நிலங்களில் பாய்கிறது தினகரன் செய்தி


கோபி:கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக 400 கிலோவாட் மின்சாரம் வழங்குவதற்காக மின்வாரியம் கடந்த 4 ஆண்டுகளுக்கு அளித்த திட்ட முன்மொழிவுக்கு அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு மேட்டூரில் இருந்து அம்மாபேட்டை, அந்தியூர், கோபி, அவிநாசி வழியாக கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி துணை மின்நிலையத்திற்கு புதிய மின்பாதை அமைக்கும் பணி கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது. உயரழுத்த மின்சார கோபுரம் அமைக்க நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மின்சார டவர்கள் அமைக்கப்பட்டு, மொத்தம் 120 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 பிரிவுகளாக, ஒவ்வொரு பிரிவிலும் 2 கம்பிகள் கொண்ட மின்பாதை அமைக்கப்பட்டது. 45 மீ. உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள டவரில் தரை மட்டத்தில் இருந்து 20 மீ. உயரத்தில் மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பணிகள் முடிவுற்ற நிலை யில் புதிய மின் பாதையில் மின்சாரம் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. 

கடந்த 22ம் தேதி மேட்டூரில் இருந்து புதிய மின் பாதையில் சோதனை ஓட்டமாக மின்சாரம் வழங்கப்பட்டது. 400 கிலோ வாட் மின்சாரம் என்பதால் அதன் பாதைகளில் மின்வாரிய அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இந்த மின் பாதை செல்லும் வழித்தடமான கோபியை அடுத்த சிறுவலூர் அருகே உள்ள மணியகாரன்புதூரில் உள்ள விளை நிலங்களில் உள்ள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயிகளை மின்சாரம் தாக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இந்த இடங்களில் இன்டிகேட்டர் வைத்து மின்சாரம் பாய்வதை உறுதி செய்தனர். இதுகுறித்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். டவர் அமைத்த ஒப்பந்ததாரர்களும் சோதனை செய்து இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சரி செய்யும் வரை புதிய மின் பாதை யில் மின்சாரம் கொண்டு செல்லக்கூடாது என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். - See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=41892#sthash.S0PuGa0j.dpuf

No comments:

Post a Comment