திருப்பூர்:தினமும் 75 சதவீதம் மின்வெட்டு ஏற்படும் நிலையிலும், குறைந்த பட்ச கட்டணம் வசூலிக்கும் மின்வாரிய நடைமுறைக்கு கிரில் ஒர்க் ஷாப் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இச்சங்க கூட்டம், சமீபத்தில் நடந்தது. தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் வடிவேல் முன்னிலை வகித்தார்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டால் கடுமையாக பாதித்துள்ள சிறு, குறு தொழில்களுக்கு பகலில் தொடர்ச்சியாக எட்டு மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும்;இரவு நேரங்களில் வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். சென்னைக்கு இரண்டு மணி நேரம், மற்ற பகுதிகளுக்கு 16 மணி நேரம் மின்வெட்டு என, மற்ற பகுதி மக்களை, இரண்டாம் தர மக்களாக கருதும் போக்கை கைவிட்டு, அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்க வேண்டும்.
தினமும் 75 சதவீதம் மின்வெட்டு செய்து விட்டு, குறைந்தபட்ச மின் கட்டணத்தை 100 சதவீதம் வசூலிப்பதை மின்வாரியம் நிறுத்த வேண்டும். பழுதடைந்துள்ள மின் உற்பத்தி நிலையங்களை பராமரிக்கவும், புதிய மின் திட்ட பணிகளை வேகப்படுத்தவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்திலுள்ள அனைத்து கட்சியினரும், வேறுபாடுகளை மறந்து, தமிழகத்தின் தொழில் துறை, விவசாய துறை, பொருளாதாரத்தை கருத்தில்கொண்டு, ஒன்று சேர்ந்து, மத்திய அரசிடம் பேசி, கூடுதல் மின்சாரம் பெற வேண்டும். இலவச திட்டங்களை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்திவிட்டு, புதிய மின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி, வருங்காலத்தில் மின் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்,என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment