திருப்பூர் : தொடர் மின்வெட்டை கண்டித்து, "டிவி', மின் விசிறியை பாடையில் கட்டி, ஊர்வலமாக எடுத்து சென்று, மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.திருப்பூர் வடக்கு ஒன்றிய இ.கம்யூ., மாநகர 20வது வார்டு கிளை சார்பில், "மின்வெட்டை கண்டித்தும், சீரான மின்சாரம் கோரியும்' போயம்பாளையம் ஆர்.கே., நகர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. காந்தி நகர், கணபதி நகர், சதாசிவம் நகர், வடிவேல் நகர், பழனிச்சாமி நகர், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதிகாரிகள் தரப்பில் சரியாக பதிலளிக்காததால் ஆவேசமடைந்த பொதுமக்கள், "டிவி' மற்றும் மின்விசிறியை, பாடையில் கட்டி, ஊர்வலமாக வந்து பி.என்.ரோடு போயம்பாளையம் பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒருவர், கிழிந்த சட்டையுடன், கையில் சட்டியுடன் நின்றிருந்தார். அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் சையதுபாபு, சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு நடத்தினார். "மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்,' என பொதுமக்கள் கூறினர்.
அனுப்பர்பாளையம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியம் வந்து, பேச்சு நடத்தினார். "மழை பெய்வதால் மின்வெட்டு குறைய வாய்ப்புள்ளது.கூடுதலாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். அதன்பின், பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
No comments:
Post a Comment