திருப்பூர், ஜூன். 30-
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள பழைய கோட்டை ஊராட்சியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் குணசேகரன். அதே பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழில் அதிபர் கோவிந்தராஜ். இவர் விசைத்தறிக் கூடம் நடத்துவதற்கு தொழில் கடன் கேட்டு வங்கியில் விண்ணப் பித்திருந்தார்.
அதற்கு தேவையான சான்றிதழ்களை பெற பழைய கோட்டை கிராம நிர்வாக அதிகாரி குணசேகரனை அணுகினார். ஆனால் கிராம நிர்வாக அதிகாரி குணசேகரன் கடந்த 6 மாதமாக இழுத்தடித்ததாக தெரிகிறது.
பின்னர் சான்றிதழ் வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு குணசேகரன் ரூ.8 ஆயிரம் தருவதாக ஒப்புக் கொண்டு முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்தை கடந்த வாரம் கொடுத்திருக்கிறார். மீதி தொகையை நேற்று வழங்குவதாக கூறியிருந்தார்.
மேலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத கோவிந்தராஜ் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. முருகேசன் உத்தரவின் பேரில் போலீசார் ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரத்தை கோவிந்தராஜிடம் வழங்கினார்கள். அதை குணசேகரனிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.
மறைவாக இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் குணசேகரனை கண்காணித்தனர். அப்போது கோவிந்தராஜ் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் சென்று லஞ்சப் பணத்தை கொடுத்தார். அந்த சமயத்தில் மறைந்திருந்த போலீசார் அலுவலகத்துக்குள் நுழைந்து கிராம நிர்வாக அதிகாரி குணசேகரனை லஞ்சப் பணத்துடன் கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
வெள்ளக்கோவிலில் உள்ள குணசேகரன் வீட்டிலும் போலீசார் சோதனை செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
No comments:
Post a Comment