திருப்பூர் மாநகராட்சியில், கட்டட பிரிவு உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் ராமலிங்கம் 43; மூன்றாவது மண்டலத்தில் பணியாற்றி வந்தார். நல்லூர் ஜெய் நகரை சேர்ந்த லோகநதான் என்பவர், தனது கட்டடத்துக்கு அனுமதி கோரி, கடந்த 13ம் தேதி விண்ணப்பித்திருந்தார்.
இருப்பினும், கட்டட அனுமதி வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டுமென, உதவி பொறியாளர் ராமலிங்கம் வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து, லோகநாதன் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழிகாட்டுதல்படி, தாராபுரம் ரோட்டில் உள்ள உதவி பொறியாளர் அலுவலகத்துக்கு லோகநாதன் பணத்துடன் சென்றுள்ளார்.
உதவி பொறியாளர் ராமலிங்கம் இல்லாததால், மொபைல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். மண்ணரையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், அங்கு வந்து பணத்தை கொடுக்குமாறும் அழைத்துள்ளார்.
அதன்பின், லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் மண்ணரை சென்ற லோகநாதன், அங்குள்ள சிறிய சந்தில் வைத்து பணம் 10 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். உதவி பொறியாளர், அப்பணத்தை வாங்கி பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். பணத்தை கொடுத்துவிட்டதாக "சைகை' செய்ததும், லஞ்ச ஒழிப்பு போலீசார், உதவி பொறியாளரை கையும், களவுமாக பிடித்தனர்.
தாராபுரம் ரோட்டில் உள்ள பொறியாளர் அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். விசாரணையில், ராமலிங்கம் தவறை ஒப்புக்கொண்டார்.
No comments:
Post a Comment