போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Wednesday 26 September 2012

மின்திருட்டை விட மோசமானது.


மின்திருட்டை விட மோசமான திருட்டு, புரட்டு - உத்திர பிரதேச மாநிலத்தில் நடந்தேறி வருகிறது. வாக்களித்த மக்களை முட்டாள்களாக கருதி கொண்டு - அரசியல்வாதிகள் செய்கிற ஒரு ஈனத்தனமான செயலாக உள்ளது - அதிகப்படியான மின்தடை நிலவும் இந்த காலத்தில், வி.ஐ.பி தொகுதிகளுக்கு மட்டும் அந்த மின் தடையில் இருந்து முழுவதுமாக விலக்களித்து - தடை இல்லா மின்சாரம் வழங்கும் அயோக்கியத்தனமான செயலையே - மின்திருட்டை விட மோசமான திருட்டு என்கிறோம்.

வாக்களித்த மற்ற தொகுதி மக்களை பார்த்து எள்ளி நகையாடுவது போலில்லை இந்த செயல். தமிழகத்தில் அல்லது இதர மாநிலங்களில் இத்தகைய செயல் உள்ளதா என்று பார்க்க வேண்டும். தமிழகத்தில் முக்கிய வி.ஐ.பிக்கள் உள்ள தொகுதியில் வசிப்பவர்கள் தான் இதற்கு விடை சொல்ல வேண்டும். நீதிமன்றம் "வி.ஐ.பி தொகுதிகளுக்கு மட்டும் வழங்கப்படும் தடையில்லா மின்சாரம்" குறித்து தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஏற்றுக் கொள்ள முடியாத செயல் என்று விவரித்துள்ளது. 

அலகாபாத் ஐகோர்ட்டில், லக்னோ பெஞ்ச் முன்பு, வழக்கறிஞர் அசோக் பாண்டே - பொதுநல வழக்கு ஒன்றை, தாக்கல் செய்தார். உத்திரபிரதேசத்தில் -வி.ஐ.பி.,க்கள் அடிக்கடி வருகை தரும் மாவட்டங்களில், 24 மணி நேரமும், தடையின்றி மின்சாரம் வினியோகிக்கப் படுவதாகவும், மாநிலத்தின் பிறபகுதிகள், பெரும் பாலான நேரம் இருளில் மூழ்கிகிடப்பதாகவும், அவர் தனது மனுவில் கூறியிருந்தார். வி.ஐ.பி.,க்கள் தொடர்புள்ள ஆறு மாவட்டங்களுக்கு, தடையில்லா மின்சாரம் வழங்குவது, நிறுத்தப்பட வேண்டும் என்றும், தன் மனுவில், கோரிக்கை விடுத்திருந்தார்.
பொது நல வழக்கு என்பது மக்களின் நன்மைக்காக இருக்க வேண்டும் என்பதில் மிக தெளிவாக  இருந்த வழக்கறிஞர் அசோக் பாண்டே நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர் . இந்த வழக்கை - நீதிபதிகள் அமிதாவ் லாலா, அனில் குமார் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. வி.ஐ.பி.,க்கள் மாவட்டங்களுக்கு மட்டும், தடையில்லா மின்சாரம் வழங்குவது, மனதை நெருடச் செய்யும் விஷயமாக உள்ளது என்று தெரிவித்தது. இது குறித்து 20ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறி உள்ளனர்.

ஆறு வி.ஐ.பி.,க்கள் மாவட்டங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருவது தொடர்பான அட்டவணையை,உ.பி., மாநில மின் துறை -நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தது. முலாயம் சிங் யாதவிடம் - சோனியா மற்றும் ராகுல் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, ரேபரேலி, அமேதி தொகுதிகளில் மின்சாரம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவருகிறது. மைன்பூர், எடாவா மாவட்டங்கள், முலாயம்சிங்கின் விருப்பத்தால்,தொடர் மின்சாரம் பெற்று வருகின்றனவாம்.

முலாயமின் மருமகள் -டிம்பிளின் தொகுதியாக இருப்பதால், கன்னோஜ் மாவட்டத்துக்கு மின்சாரம் வழங்குவதில், தனி கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. மாநிலத்தின் மூத்த அமைச்சர் அசம் கானின் தொகுதியாக ராம்பூர் இருக்கிறது." இது மிக பெரிய அநியாயம் இல்லையா? பாதிப்பு, தட்டுப்பாடு போன்றவற்றை எல்லாம் மாநிலத்திலுள்ள எல்லா மக்களும் சமமாக பங்கிட்டு கொள்வது தானே நியாயம். எல்லா தொகுதிகளும் வி.ஐ.பி தொகுதிகளாக மாற முடியுமா?
 "என் தொகுதியில் மின்வெட்டே இல்லை" என்று வெட்டி பெருமை பேசவா இந்த வேலை. இதிலிருந்தே அரசியல்வாதிகளின் மாற்றாந்தாய் மனப்போக்கு புரியவில்லையா? "மின்திருட்டுக்கு பெயர் பெற்ற மாநிலம் உத்திரபிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இந்த திருட்டையும் சேர்த்து கொண்டார்கள் போலும்.  மாநிலத்திலுள்ள ஏனைய பகுதிகள், விவசாயிகள், தொழிற்கூடங்கள் எல்லாம் மின் தட்டுப்பாட்டால் அவதியுறும்போது - தம் அதிகாரத்தை இப்படி துஷ்பிரயோகம் செய்யலாமா" என்று சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளில் ஒருவருக்கு கூடவா நேர்மையாக சிந்திக்க தோன்றவில்லை. இந்திய அரசியல்வாதிகளிடம் நேர்மையை எதிர்பார்ப்பது நம் தவறு தானோ.

படைப்புக்கு உதவி தினமலர் செய்தி.

No comments:

Post a Comment