திருப்பூர் : "அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷனில் இணைப்பு பெற்றுள்ள கேபிள் ஆபரேட்டர்கள், இணைப்பு எண்ணிக்கையை முறையாக சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், பகுதி வாரியாக வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கப்படும்,' என, அரசு கேபிள் "டிவி' நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், முந்தைய தி.மு.க., ஆட்சி காலத்தில் கிடப்பில் போடப்பட்ட அரசு கேபிள் "டிவி' நிறுவனத்துக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது. மாவட்டம்தோறும் கேபிள் "டிவி' கட்டுப்பாட்டு அறைகள் முழு வீச்சில் துவங்கப்பட்டு, கேபிள் ஆபரேட்டர்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டது.முதல்கட்டமாக, 100 சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.
பொதுமக்களிடம் மாத சந்தாவாக 70 ரூபாய் வசூலிக்கவும், அதில் 20 ரூபாயை அரசுக்கு செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. தங்களிடமுள்ள கேபிள் இணைப்புகளின் எண்ணிக்கையை காண்பித்து உரிய தொகை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.அரசின் எச்சரிக்கையை மீறி, அரசு கேபிளில் ஒளிபரப்பு செய்யாத சில சேனல்களை "டிஷ் ஆண்டனா' மூலம் பெற்று ஒளிபரப்பு செய்தும், அறிவித்த கட்டணத்தைவிட, கூடுதலாக வசூலித்தும், இணைப்பு எண்ணிக்கையை சரியாக கணக்கு காட்டாமலும், பல்வேறு விதமான முறைகேடுகளில் கேபிள் ஆபரேட்டர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர்.அரசு கேபிள் "டிவி' அலுவலர்கள், பல்வேறு விதங்களில் நடவடிக்கை எடுத்தும், இவற்றை தடுக்க முடியாத நிலை காணப்பட்டது. அதேபோல், உள்ளூர் சேனல் ஒளிபரப்பிலும் அரசியல் தலையீடு காரணமாக பெரும் அவல நிலை காணப்பட்டது. தற்போது இப்பிரச்னைகளுக்கு ஓரளவு தீர்வு காணப்பட்டுள்ளது.இந்நிலையில், அரசு கேபிள் கார்ப்பரேஷன் தனி தாசில்தார்களுக்கான ஆய்வு கூட்டம், சென்னையில் நடந்தது. கேபிள் கார்ப்பரேஷன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் முன்னிலை வகித்தனர். அதில், "அரசு உறுதியளித்த படி, அனைத்து சேனல்களும் அரசு கேபிளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எனவே, கேபிள் ஆபரேட்டர்கள் தனியாக டிஷ் வைத்து வேறு சேனல்கள் ஒளிபரப்பக்கூடாது. அதை காரணம் காட்டி, கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது. மாதம்தோறும் உரிய கட்டணத்தை 10ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அனைத்து பகுதிகளிலும் கேபிள் ஆபரேட்டர்கள், தங்களிடமுள்ள இணைப்புகளை முழுமையாக தெரிவிக்க வேண்டும்."இதில் தவறோ, சந்தேகமோ இருப்பதாக கருதினால், பகுதி வாரியாக தேர்வு செய்யப்படும் ஆபரேட்டரின் இணைப்பு பகுதியில் திடீர் ஆய்வு நடத்தி, வீடு வீடாகச் சென்று கணக்கிடப்படும். அதில் கண்டறியப்படும் எண்ணிக்கை மற்றும் மறைக்கப்பட்ட எண்ணிக்கையை அளவீடாக் கொண்டு, அப்பகுதியில் உள்ள அனைத்து ஆபரேட்டர்களுக்கும் இணைப்புகள் எண்ணிக்கை கணக்கிட்டு சந்தா தொகை வசூலிக்க வேண்டும்,' என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதையடுத்து, கேபிள் "டிவி' தனி தாசில்தார், தாலுகாக வாரியாக அந்தந்தப் பகுதி கேபிள் ஆபரேட்டர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி, புதிய அறிவிப்புகள் தொடர்பாக தெரிவித்து வருகின்றனர். நிலுவை செலுத்தாவிட்டால் : திருப்பூர் மாநகரப் பகுதியில் உள்ள கேபிள் "டிவி' ஆபரேட்டர்களுடனான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. தனி தாசில்தார் மோகன் தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர் துர்கா சங்கர் முன்னிலை வகித்தார். மாநகரப் பகுதி கேபிள் ஆபரேட்டர்கள் 100 பேர் பங்கேற்றனர்.தனி தாசில்தார் மோகன் பேசியதாவது:கடந்த மூன்று மாதத்தில் ஆபரேட்டர்கள் செலுத்த வேண்டிய தொகை லட்சக்கணக்கில் உள்ளது. அரசு அறிவித்தபடி, அனைத்து சேனல் களும் தற்போது ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. நிலுவையிலுள்ள தொகையை வரும் 15க்குள் செலுத்தாவிட்டால் 16ம் தேதி ஒளிபரப்பு துண்டிக்கப்படும் அதன்பின், உரிய தொகை செலுத்தி, சென்னையிலிருந்து உத்தரவு பெற்ற பின்பே மீண்டும் இணைப்பு வழங்கப்படும். இதில் எந்த சலுகையும் தரப்படாது. மக்கள் தொகை மற்றும் வீடு கணக்கெடுப்பு; இலவச "டிவி' திட்டத்தில் வழங்கப்பட்ட "டிவி' எண்ணிக்கை; ரேஷன் கார்டு விவரம்; முந்தைய தனியார் எம்.எஸ்.ஓ.,விடம் பெற்ற இணைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பகுதி வாரியாக எவ்வளவு "டிவி'க்கள் உள்ளன என்ற கணக்கு, மாநில தலைமையிடம் உள்ளது. தற்போது ஆபரேட்டர்கள் கொடுத்துள்ள கணக்கு 25 முதல் 30 சதவீதம் மட்டுமே உள்ளது. அனைத்து ஆபரேட்டர்களும், தங்கள் இணைப்பு குறித்த உண்மையான விவரங்களை எழுதி, சீல் வைத்து, கையொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும். இத்தகவல் சென்னைக்கு அனுப்பப்படும். ஒளிபரப்பு சிக்னலில் பிரச்னை இருந்தால் எழுத்துப்பூர்வமாக புகார் தெரிவிக்க வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர் பற்றாக்குறை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர், என்றார். கேபிள் ஆபரேட்டர் விஜயன் பேசுகையில், ""மின் கட்டணம் உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளோம். இரண்டு மாதம் கட்டணம் நிலுவை வைத் துள்ளேன். எனக்கு முறையாக சிக்னல் கிடைக்க வில்லை என நான்கு மாதமாக புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை,'' என்றார். அதற்கு தாசில்தார் பதிலளிக்கையில், ""இது, சங்க கூட்டம் அல்ல; விவாதம் வேண்டாம். புகார் இருந்தால் எழுதிக்கொடுங்கள். மேலாண்மை இயக்குனர் கொடுத்த அறிவிப்புகளை உங்களுக்கு தெரிவிப்பது என் கடமை,'' என்றார்.
No comments:
Post a Comment