திருப்பூர்: பிறந்த குழந்தை பேசியதாகவும், குழந்தைகள் உயிருக்கு ஆபத்து என வதந்தி பரவியதாலும் தமிழகத்தில் பலரும் தங்களுடைய குழந்தைக்கு தலையை சுற்றி தேங்காய் உடைத்தனர். இதனால் தேங்கி கிடந்த தேங்காய்க்கு மவுசு ஏற்பட்டதுடன் சில மாவட்டங்களில் தேங்காய் தட்டுப்பாடும் ஏற்பட்டது.
தர்ம்புரி, கிருஷ்ணகிரி, அரியலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல் முளைத்த பிறந்த குழந்தை பேசியது என்பது தான் அந்த செய்தி :
தகவல் விவரம் வருமாறு:
ஒரு குழந்தை பிறந்தவுடன் இதற்கு பல் முளைத்து இருந்தது. பிறந்த உடன் பேசியது. நான் இன்னும் சற்று நேரத்தில் இறந்து விடுவேன் . என்னுடன் ஆயிரத்து 500 குழந்தைகளை உயிரோடு அழைத்து செல்வேன். இவ்வாறு கூறியது. இந்த தகவல் எல்லா ஊர்களுக்கும் பரவியது. அவரவர் உறவினர்களுக்கு இந்த தகவலை சொல்லி பரிகாரம் செய்து கொள்ளவும் கேட்டுக்கொண்டனர். அதாவது குழந்தையை காப்பாற்ற வேண்டுமானால் தேங்காய் வாங்கி மஞ்சள் குங்குமம் தடவி, தலையை சுற்றி முச்சந்தியில் உடைக்க வேண்டும். இந்த பரிகாரம் செய்தால் குழந்தை உயிருக்கு ஆபத்து வராது என்று நம்பப்பட்டது.
இதனால் திருப்பூரில் கரும்பாளையம், மங்கலம்கோடு, பெரிச்சிபாளையம், கோட்டை மாரியம்மன் கோயில் தெரு, உள்ளிட்ட பகுதிகளில் இந்த வதந்தியால் பரபரப்பு நிலவியது. இது போல கிருஷ்ணகிரி, தர்மபுரியிலும் இதே நிலை நீடித்தது. இத்த தகவல் மேலும் சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு பரவி வருகிறது. ஆங்காங்கே தேங்காய் உடைப்பு காட்சியை பார்க்க முடிந்தது.
தமிழகத்தை ஆட்டிப்படைத்த வதந்தி விவரம்:
இதற்கு முன்னர் இதுபோல மூட நம்பிக்கை வதந்தி பல நமது தமிழகத்தை பாதித்துள்ளது. தலையில்லா முண்டம் வருது. வேப்பமரத்தில் பால் வடிந்தது. பிள்ளையார் பால் குடித்தார், மேரி மாதா கண்ணில் ரத்தம் வடிகிறது, சகோதரர்கள் தங்கைக்கு பச்சை சேலை வாங்கி கொடுக்கனும், தலைப்புள்ள ஆம்பிளையாக இருந்தால் ஏழு பேருக்கு குங்குமம் கொடுக்கணும், சமீபத்திய மெகந்தியால் மயக்கம், இது போன்று வதந்தி பரவியிருப்பதை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.
சமீபத்தில் தேங்காய் வியாபாரம் குறைவாக இருந்ததாகவும், இதன் விலை வீழ்ச்சி அடைந்து இருந்தது. நேற்று வரை 3 தேங்காய் 10 ரூபாய்க்கு விற்று வந்தது. ஆனால் இன்று தேங்காய் ஒன்று 20 ரூபாய் அளவிற்கு உயர்ந்தது. திருப்பூர் பகுதியில் தேங்காய் கிடைக்காமல் பலர் கடை, கடையாக அலைந்தனர்.
No comments:
Post a Comment