போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Monday 9 July 2012

திருப்பூர் :தபால் துறையில் புதிய வசதி 40 கிலோ வரை பார்சல் அனுப்பலாம்!


 திருப்பூரில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலம் 40 கிலோ எடையுள்ள பொருட்களை "பார்சல்' சர்வீஸ் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பலாம். இதேபோல், வெளிநாடுகளுக்கும் அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.மொபைல்போன், இன்டர்நெட் என உலகம் விஞ்ஞான வளர்ச்சியில் சென்று கொண்டிருப்பதால், தபால் துறையின் கடித போக்குவரத்து அரிதாகி விட்டது. வருமானத்தை அதிகரிக்க, தபால் துறை - தனியாருடன் இணைந்து தங்க நாணயம் விற்பனை, "சோட்டா கூல்பிரிட்ஜ்' உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது. தற்போது 40 கிலோ எடையுள்ள பொருட்களையும் "பார்சல்' அனுப்பும் வசதியை, இந்திய தபால் துறை ஏற்படுத்தியுள்ளது.தலைமை தபால் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:ஒன்று முதல் 40 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்ல, "பிளாட் ரேட் பார்சல்' என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பொருட்களை கொண்டு செல்வதற்குரிய "பாக்ஸ்' தபால் அலுவலகத்தில் இருக்கும். இந்தியாவுக்குள் பொருள் அனுப்ப ஒரு கிலோவுக்கு 125 ரூபாய்; 2.5 கிலோ 200; ஐந்து கிலோ 400 ரூபாய் செலுத்த வேண்டும். வெளிநாடுகளாக இருந்தால் ஒரு கிலோ 1,000 ரூபாய்; 2.5 கிலோ 1,500; ஐந்து கிலோ 2,500 ரூபாய் செலுத்த வேண்டும். அனுப்ப வேண்டிய பொருட்களை வாடிக்கையாளர்கள் கொண்டு வந்தால், தபால் 
அலுவலகத்தில் "பேக்கிங்' செய்து விமானம் மூலம் பொருட்களை அனுப்புவோம்.
பாக்ஸில் அனுப்பியவர் முகவரி, பெறுபவர் முகவரி குறிப்பிடப்பட்டிருக்கும்; பில் தரும்போது பாக்ஸில் உள்ள சீரியல் நம்பர் வாடிக்கையாளரிடம் வழங்கப்படும். அந்த சீரியல்நம்பரை சரிபார்த்து, பொருட்களை பெறுபவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.சிறிய பாக்ஸ்களை போல், பெரிய அளவில் 20 கிலோ முதல் 60 கிலோ வரை பாக்ஸ் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்; பனியன், டவல்களை அனுப்ப "தனி பேக்கிங் கவர்' உள்ளது. இந்திய தபால் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், பொருட்களை நம்பி வழங்கலாம். 
பாதுகாப்பு காரணம் கருதி, கூர்மையான, எளிதில் தீப்பிடிக்க, வெடிக்கக்கூடிய பொருட்களை அனுப்ப வேண்டாம் என உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பொருட்களை விமான நிலையத்தில் "கஸ்டம்ஸ்' அதிகாரிகள் பரிசோதனை செய்த பிறகே அனுப்பப்படும். பனியன் நிறுவனத்தினர் "சாம்பிள்' பீஸ் அனுப்ப இத்திட்டம் அருமையானது, என்றார்.

No comments:

Post a Comment